கிழக்கு மாகாணத்திலுள்ள கஷ்டப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான, கணித ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஆசிரிய உதவியாளர்களை வலய மட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கா தெரிவித்தார்.கிழக்கு மகாணத்தில் நீண்ட காலமாக நிரப்பப்படாமலுள்ள சிங்கள, தமிழ் மொழி மூல விஞ்ஞான, கணித ஆசிரியர்களை நியமிப்பதற்கு அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கோ அல்லது கல்வியியல் கல்லூரிகளுக்கோ அனுமதி கிடைக்காதவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இஸட் புள்ளியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி மாகாணத்திலுள்ள வலய மட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு கிழக்கு மாகாண சபை மீண்டும் தீர்மானித்துள்ளது.
தகைமையுடைய விண்ணப்பதாரிகள் கீழ் குறிப்பிடப்படும் தினங்களில் நிரந்தர வதிவிட மாவட்டத்திலுள்ள குறித்த இடங்களில் நடைபெறும் நேர்முகப்பரீட்சைகளுக்கு சமூகமளிக்குமாறு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்கழுவின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கா கேட்டுள்ளார்.
திருக்கோணமலை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு இம்மாதம் 20ஆம் திகதி மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திலும் அம்பாறை மாவட்ட சிங்கள மொழிப் பரீட்சாத்திகளுக்கு 21ஆம் திகதி அம்பாறை ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.
அத்துடன், அம்பாறை மாவட்ட தமிழ்மொழி மூல பரீட்சாத்திகளுக்கு 23ஆம் திகதி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளுக்கு 24ஆம் திகதி மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment