
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இன்றைய தினம் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பி.எம்.யு.டி.பஸ்நாயக்கா, இலங்கை நிர்வாக சேவையில் 33 வருட கால அனுபவத்தைக் கொண்ட மிகவும் புகழ்வாய்ந்த ஒருவராவார்.
இவர் நிதியமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராகவும், பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், தூர நோக்கு குறித்த பாதையில் பயணித்து சமாதானத்தை வென்றெடுக்க கடுமையாக உழைக்கவிருப்பதாக திரு பஸ்நாயக்கா பதவியேற்ற பின் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் இன்றைய பதவியேற்பு வைபவத்தில் அரச அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் பிரதானி ஜகத் ஜெயசூரிய, முப்படைகளின் தளபதிகள், அமைச்சு அலுவலர்கள், சிரேஷ்ட படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஷ இதுவரை காலமும் வகித்து வந்த பதவியே தற்போது புதிய ஜனாதிபதியினால் பி.எம்.யு.டி.பஸ்நாயக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள் : பாதுகாப்பு அமைச்சு




Post a Comment